2014-05-30 17:01:13

புனிதரும் மனிதரே. - துன்பறுத்தியவரையும் குணப்படுத்தியவர் (புனித ஆக்னஸ்)


292ம் ஆண்டு உரோமையப் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார் புனித ஆக்னஸ். ஒரு நல்ல கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட இவரது பெயருக்கு இலத்தீன் மொழியில் "ஆட்டுக்குட்டி" என்று பொருள். அவர் வயதில் வளர வளர அழகிலும் வளர்ந்தார். பல இளைஞர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவர், இயேசுவே வேண்டும் என அறிவித்து, யாரையும் திருமணம் செய்ய இசைவு அளிக்கவில்லை.
புனித ஆக்னஸ் வாழ்ந்து வந்த நேரம் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்ட காலமாகும். அவர் திருமணம் செய்யமாட்டேன் என்று மறுத்தவர்களில் உயர் அரசு அதிகாரி ஒருவரின் மகனும் உண்டு. புனித ஆக்னஸ் கிறிஸ்தவர் என்பதால் அவரை சித்திரவதை செய்து கொலை செய்யப் போவதாக மிரட்டினார் அந்த அதிகாரியின் மகன். அவர் எதற்கும் பணியவில்லை. உரோமையச் சட்டம் கன்னியை கொலை செய்வதற்கு அனுமதி அளிப்பதில்லை. அவரை ஒரு விலைமாதர் இல்லத்திற்கு அனுப்ப அதிகாரிக்கு ஆலோசனை கூறினர் அமைச்சர்கள். அதன்படி அவர் அங்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருடைய கற்பு அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டது.
புனித ஆக்னஸைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அதிக ஆசை கொண்ட அரசு அதிகாரியின் மகன், அதனால் தன் கண்ணையே குத்தி காயப்படுத்தினான். புனித ஆக்னஸ் அவரைக் குணப்படுத்தினார். தன் மகனுக்கு நடந்ததைக் கேள்வியுற்ற அரசு அதிகாரி, அதற்கு காரணம் புனித ஆக்னஸ்தான் என்று குற்றம் சாட்டினார். முதலில் அவரை நெருப்புக்குள் தள்ளிக் கொலை செய்ய முயன்றார். ஆனால் நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. பின் வாளினால் தலை வெட்டப்பட, புனித ஆக்னஸ் தனது 12ம் வயதில் மறைசாட்சி மரணம் அடைந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.