2014-05-28 15:42:30

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முக்கிய செயல்களின் அட்டவணை


மே,28,2014. வருகிற ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முக்கிய செயல்களின் கால அட்டவணையை திருப்பீட வழிபாட்டு அலுவலகம் இச்செவ்வாயன்று வெளியிட்டது.
ஜூன் 8, பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 10 மணிக்கு திருப்பலி நிகழும்.
ஜூன் 19, வியாழனன்று, வத்திக்கானில் இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி, மாலை 7 மணிக்கு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை ஆற்றும் திருப்பலியைத் தொடர்ந்து, திரு நற்கருணை ஊர்வலமும், அதைத் தொடர்ந்து, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் திரு நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.
ஜூன் 29, ஞாயிறன்று, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி, காலை 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை ஆற்றும் திருப்பலியில், கடந்த ஆண்டு பேராயர்களாகப் பொறுப்பேற்றோருக்கு, 'பாலியம்' எனும் கழுத்துப் பட்டையை, திருத்தந்தை அணிவிக்கும் திருச்சடங்கு நடைபெறும்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன், ஜூலை மாதங்களில், இத்தாலியின் இரு பங்குகளுக்கு மேய்ப்புப்பணி பார்வையிடச் செல்கிறார் என்றும், ஆகஸ்ட் மாதம் 13 முதல் 18ம் தேதி முடிய தென்கொரியாவில் நடைபெறும் 6வது ஆசிய இளையோர் நாளையொட்டி, அந்நாட்டிற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.