புனித பூமிக்கான திருப்பயணத் திட்டத்தில் எதிர்பாராத, அதேவேளை, நம்பிக்கை தந்த இரு நிகழ்வுகள்
மே,26,2014. தன்னுடன் இணைந்து அமைதிக்காகச் செபிக்க வத்திக்கானுக்கு வருமாறு திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் பாலஸ்தீன மற்றும் இஸ்ராயேல் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தது எதிர்பாராத
ஒன்று. நேரடியாக, அதேவேளை, வெளிப்படையாக இந்த அழைப்பை திருத்தந்தை விடுத்ததும், அதனை
இரு நாடுகளின் தலைவர்களும் உடனே ஏற்றுக்கொண்டனர் என்பது, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்களில்
ஈடுபட்டுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளிடையே, அமைதியைக் கொணரும் புதிய நம்பிக்கையை தருவதாக
உள்ளது. இரண்டாவது நிகழ்வும், பயணத்திட்டத்தில் இடம்பெறாதிருந்த ஒன்று. அதாவது, இஸ்ராயேல்
அரசு, பெத்லகேம் நகரைச்சுற்றி எழுப்பியுள்ள பிரிவினைச் சுவரில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், தலைச்சாய்த்து, பயங்கரவாத நிகழ்வுகளுக்குப் பலியாகியுள்ள மக்களுக்காக இறைவனை
நோக்கிச் செபித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும், மனிதகுலம் பகைமையைக் களைந்து அமைதியில்
வாழவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடுகளாக உள்ளன.