2014-05-21 16:51:29

மே,22, 2014 புனிதரும் மனிதரே : கைம்பெண் வாழ்வும் புனிதமும்(புனித ரீத்தா)


தனது விருப்பத்துக்கு மாறாக இளவயதில் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டு 12வது வயதில் முதல் குழந்தைக்குத் தாயானவர் ரீத்தா. இவருடைய கணவர் பவுலோ மன்சினி செல்வந்தர். முன்கோபக்காரர், ஒழுக்கமற்றவர், வன்முறையாளர். அவர்கள் வாழ்ந்த Cascia மாநிலத்தில் பல பகைவர்களைக் கொண்டிருந்தவர். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கையில் இரு மகன்களுக்குத் தாயானார் ரீத்தா. ரீத்தாவை மிகவும் இழிவாக நடத்தினார் பவுலோ. தனது இரு மகன்களுக்கும் தனது தீய வழிகளைக் கற்றுக்கொடுத்தார். தனது பக்தி, பணிவு, பொறுமை, கனிவு போன்ற பண்புகளால் தனது கணவரை மனமாற்ற முயற்சித்தார் ரீத்தா. ஆனால் அவரால் இயலவில்லை. இறுதியில், மன்சினி குடும்பத்துக்கும், கிக்கி குடும்பத்துக்கும் இடையே இருந்த பகைமையில் ரீத்தாவின் கணவர் குத்திக் கொலைசெய்யப்பட்டார். ரீத்தாவின் செபத்தால் அவர் இறப்பதற்கு முன்னர் மனம் வருந்தினார் எனச் சொல்லப்படுகிறது. ரீத்தாவின் கணவரின் அடக்கச் சடங்கின்போது கொலைகாரர்களைப் பொதுப்படையாக மன்னித்தார் ரீத்தா. ஆயினும், பவுலோவின் சகோதரர் பெர்னார்தோ, கொலைகாரர்களைப் பழிவாங்கவேண்டுமென்று அவரது இரு மகன்களையும் தூண்டினார். தனது மகன்கள் இந்த வன்முறை எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று ரீத்தா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில் வயிற்றுப்போக்கால் இரு மகன்களும் இறந்தனர். இறுதியில் கைம்பெண் ரீத்தா தனது 36வது வயதில் Casciaவில் அகுஸ்தீன் துறவு சபையில் சேர்ந்தார். அவரின் குடும்பம் பிரச்சனை மிக்கது என்பதால் அருள்சகோதரிகள் அவரை சபையில் சேர்ப்பதற்கு அஞ்சினர். ரீத்தா குடும்பப் பிரச்சனையைத் தீர்த்துவைத்துவிட்டு சபையில் சேர்ந்தார். அவர் ஒருநாள் சிலுவையின் முன்னர் செபித்துக் கொண்டிருந்தபோது இயேசுவின் முள்முடியிலிருந்து ஒரு முள் ரீத்தாவின் நெற்றியில் குத்தி காயத்தை ஏற்படுத்தியது. இக்காயம் அவரது இறப்பு வரை இருந்தது. இத்தாலியின் Spoletoவில் 1381ம் ஆண்டு பிறந்த ரீத்தா, 1457ம் ஆண்டு மே 22ம் தேதி மரணமடைந்தார். புனித ரீத்தா, தீர்க்க முடியாத வழக்குகளுக்குப் பாதுகாவலர் எனப் போற்றப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.