திருத்தந்தை ஆயர்களிடம் : முகத்தில் மகிழ்வுடனும் இதய ஆர்வத்துடனும் மக்களை நாடிச் செல்லுங்கள்
மே 20,2014. இயேசு கிறிஸ்து உயிர்த்தபின் புனித பேதுருவை நோக்கி, 'என்னைப் பின்செல்'
என்று கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து இத்திங்கள் மாலை இத்தாலிய ஆயர்களுக்கு உரை வழங்கினார்
திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலிய ஆயர்பேரவையின் 66வது பொதுஅவையில் கலந்துகொள்ளும்
ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முகத்தில் மகிழ்வுடனும்,
இதயத்தில் விருப்பத்துடனும் மக்களை நாடிச் செல்வதற்கே இயேசு நம்மைப் பார்த்து, 'என்னைப்
பின்செல்' என அழைத்துள்ளார் எனக் கூறினார். இயேசுவின் மந்தையைப் பராமரிக்கும் உண்மையான
மேய்ப்பர்களாகச் செயல்படவேண்டிய ஆயர்கள், நம்பிக்கைக்குரிய சாட்சிகளாகச் செயல்பட்டு,
உதவி தேவைப்படுபவர்களுக்குச் சோர்வின்றிப் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும்
வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். உங்களுள் இருக்கும் நம்பிக்கையைக் கண்டு,
அதற்கான காரணத்தை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு உங்களின் செயல்பாடுகள் இருக்கவேண்டும்
எனவும் இத்தாலிய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.