ஜோர்டனில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் 1400 சிறார்களுக்கு புது நன்மை
மே 20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாரம் சனிக்கிழமையன்று ஜோர்டன் நாட்டு
தலைநகர் அரங்கில் திருப்பலி நிறைவேற்றும்போது 1400 குழந்தைகள் புதுநன்மை பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொள்ளும் மூன்று நாள் திருப்பயணத்தில், ஜோர்டன்
நாட்டுத் தலைநகர் அம்மானின் அனைத்துலக அரங்கில் திருப்பலி நிறைவேற்றும்போது, 1400 சிறார்கள்
புதுநன்மை பெறுவார்கள் என அறிவித்த அருட்பணியாளர் Rifat Bader அவர்கள், சிறார்களும் அவர்களின்
பெற்றோர்களும் இத்திருப்பலியில் பங்கேற்பதற்குரிய ஏற்பாடுகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே
துவங்கிவிட்டன என்றார். திருநற்கருணை எனும் திருவருட்சாதனத்தை முதன் முறையாகப் பெறவிருக்கும்
சிறார்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் அருள்பணியாளர்
Bader அவர்கள் கூறினார். இச்சனிக்கிழமை ஜோர்டான் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், தன் மூன்று நாள் திருப்பயணத்தில் பெத்லகேம் மற்றும் எருசலேமின் புனிதப் பகுதிகளை
தரிசிப்பதுடன், அரசுத் தலைவர்களையும் விசுவாசிகளையும் சந்திப்பார்.