2014-05-20 15:50:51

கொலம்பிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


மே 20,2014. கொலம்பியாவின் Fundacion எனும் நகர் அருகே இடம்பெற்ற பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 32 பேர் பலியாகியுள்ளது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அப்பகுதி ஆயருக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த கவலையையும் செப உறுதிகளையும் தெரிவித்து திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், கொலம்பியாவின் சாந்தா மார்த்தா மறைமாவட்ட ஆயர் Ugo Eugenio Puccini Banfiக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், குழந்தைகளை இவ்விபத்தில் இழந்துள்ள குடும்பங்களுக்கு திருத்தந்தையின் ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று அருங்கொடை இயக்கக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது வட கொலம்பியாவின் Fundacion என்ற நகர் அருகே இந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 32 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பான்மையினோர் 14 வயதிற்குட்பட்ட சிறார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.