மே 19, 2014. பஹ்ரைன் நாட்டு மன்னர் Hamad bin Isa Al Khalifa அவர்கள் இத்திங்களன்று
காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். திருத்தந்தையுடன்
நடைபெற்ற இச்சந்திப்பிற்குப்பின், திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகளிடையேயான
உறவுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்துப்
பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார் பஹ்ரைன் மன்னர். மத்தியக் கிழக்குப் பகுதியின்
அமைதி, நிலையான தன்மை, அங்கு பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல், பஹ்ரைனில் சிறுபான்மையினராக
உள்ள கிறிஸ்தவர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பணி, அந்நாட்டின் கத்தோலிக்க சமூகத்தின் மீது
மன்னர் Isa Al Khalifa அவர்கள், தனிப்பட்டமுறையில் காட்டிவரும் அக்கறை போன்றவை இச்சந்திப்பின்போது
பேசப்பட்டன.