திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியால், அர்ப்பண வாழ்வில்சந்திக்கும் சவால்கள் - உரோம் நகரில் கருத்தரங்கு
மே,14,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியால், அர்ப்பண வாழ்வில், இருபால்
துறவியர் அனுபவிக்கும் மாற்றங்கள், சந்திக்கும் சவால்கள் ஆகியவை குறித்த ஒரு கருத்தரங்கு
மே 19, வருகிற திங்கள், உரோம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ப்பண
மற்றும் திருத்தூதுப் பணி வாழ்வில் உள்ளோருக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீடப் பேராயத்தின்
தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கில் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், துறவியருக்கு முன் வைத்துள்ள பல கருத்துக்களும், சவால்களும் மையக்
கருத்துக்களாக அமையும். பல்வேறு துறவுச் சபைகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கும்
இக்கருத்தரங்கில், கர்தினால் Braz de Aviz அவர்கள் "உலகின் விளிம்புகளிலிருந்து வத்திக்கானுக்கு"
என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் ஒன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.