2014-05-14 16:30:26

கர்தினால் Vallini அவர்கள், வெள்ளிவிழா நன்றித் திருப்பலியில் வழங்கிய மறையுரை


மே,14,2014. 'என் அன்பில் நிலைத்திருங்கள்' என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் தன்னை எப்போதும் ஈர்த்து வந்துள்ளதாகவும், தன் ஆயர் பணிக்கு உறுதி தந்ததாகவும் கர்தினால் Agostino Vallini அவர்கள் கூறினார்.
மே 13, இச்செவ்வாயன்று, தன் ஆயர் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த கர்தினால் Vallini அவர்கள், இச்செவ்வாய் மாலை உரோம் நகர் புனித லாத்தாரன் பசிலிக்காப் பேராலயத்தில் ஆற்றிய நன்றித் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தான் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, தன் பங்கில் பணியாற்றிய ஓர் எளிமையான அருள் பணியாளரே தன்னை இந்த வாழ்வுக்கு ஈர்த்த முதல் காரணம் என்பதை எடுத்துரைத்த கர்தினால் Vallini அவர்கள், இயேசுவின் அழைப்பில் தான் தடுமாறிய காலம் மிகக் குறைவே என்று கூறினார்.
2008ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி முதல், கர்தினால் Vallini அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் சார்பாக உரோம் நகரின் ஆயராகப் பொறுப்பேற்றார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, கர்தினால் Vallini அவர்களை, தன் சார்பில் உரோம் மறைமாவட்டத்தின் ஆயராக தொடரும்படி பணித்தார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்று வந்த 1965ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி, அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட Vallini அவர்கள், வருகிற ஜூலை 19ம் தேதி தன் அருள்பணி வாழ்வின் பொன்விழாவையும் சிறப்பிக்கின்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.