திருத்தந்தை பிரான்சிஸ் - கல்வி மட்டுமே ஒருவரை அருள் பணியாளராக உருவாக்க முடியாது
மே,13,2014. உரோம் நகரில் இயங்கிவரும் பாப்பிறை அருள் பணியாளர் பயிற்சி இல்லங்களில் பயிலும்
பல்வேறு நாடுகளின் குருத்துவ மாணவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைன் நாடு அனுபவித்துவரும்
துன்ப நிலைகளில் தானும் பங்கு கொள்வதாகவும், துன்புறும் மக்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும்
கூறினார். ஒவ்வொரு குருத்துவ மாணவரும் நான்கு விதமான பயிற்சிகளைப் பெறவேண்டும் என்பதை
எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆன்மீகப் பயிற்சி, கல்விப் பயிற்சி,
சமுதாய வாழ்வுக்கான பயிற்சி, மற்றும் அப்போஸ்தலிக்கப் பயிற்சி என்பன இந்த நான்கு பயிற்சிகள்
என்று சுட்டிக்காட்டினார். கல்வி மட்டுமே ஒருவரை அருள் பணியாளராக உருவாக்க முடியாது,
அத்துடன், சமுதாய வாழ்வு, ஜெப வாழ்வு, அப்போஸ்தலிக்க வாழ்வு ஆகியவையும் இன்றியமையாதவை
என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுட்டிக்காட்டினார்.