திருத்தந்தை : மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவத்தின் விதையானது
மே 06,2016. கிறிஸ்தவ மதத்தை ஒழிக்க விரும்பிய அன்றையத் தலைவர்களின் பொறாமைக்கு, இயேசுவைப்போல்
திருஅவையின் முதல் மறைசாட்சியான ஸ்தேவான் உள்ளானார் என இச்செவ்வாய் காலை திருப்பலியில்
மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். பொய்சாட்சியங்களின் துணையுடன் புனித ஸ்தேவானுக்கு
எதிரான தீர்ப்பு அவசரம் அவசரமாக வழங்கப்பட்டது என, தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா
இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய காலை திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை
பிரான்சிஸ், இவர் மீது தவறாகத் தீர்ப்பளித்து தண்டனை வழங்கியவர்களின் மனதில் நிம்மதியின்றி
அலைக்கழிக்கப்பட்டதைக் காணமுடிந்தது என்றார். கிறிஸ்துவின் மீது கொண்ட பகையால் சாத்தான்
இவர்கள் மனதில் விதைகளை விதைத்து, இயேசுவுக்கு ஆற்றியதையே இப்புனிதருக்கும் ஆற்றவைத்தது.
இப்புனிதரும் இயேசுவைப்போலவே தன் பகைவர்களை மன்னித்து மாண்டார் எனவும் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ். மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவத்தின் விதையானது, அவர்களின் சாட்சியம்
விசுவாசத்தைப் போதித்தது என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, நம் ஒவ்வொரு
வாழ்வு நடவடிக்கையிலும் விசுவாசத்தின் சாட்சியாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும்
வலியுறுத்தினார்.