திருத்தந்தையின் எருசலேம் பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு ஊக்கமளிக்கும்
மே 05,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எருசலேம் திருப்பயணத்தின்போது இம்மாதம்
25ம் தேதி Ecumenical கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் பர்த்தலோமியோவுக்கும் திருத்தந்தைக்கும்
இடையே இடம்பெற உள்ள சந்திப்பு கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான புது ஊக்கங்களை வழங்கும் என்ற
நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அக்கிறிஸ்தவ சபையின் அதிகாரி ஒருவர். தொலைநோக்குடனும்,
நடைமுறை சிந்தனைகளுடனும், மனிதகுலத்திற்கு அருகாமையிலும் இருந்து செயல்படும் இவ்விரு
தலைவர்களும் சந்திப்பது கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு பெரும் உந்துதலைக் கொணரும் என்ற கிறிஸ்தவ
சபை ஆயர் எம்மானுவேல், எருசலேமில் இவர்கள் இருவரும் சந்திக்கும்போது, மத்தியக் கிழக்குப்பகுதி
கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய குடும்ப முறைகள் காப்பாற்றப்படுதல்
போன்றவைக் குறித்தும் விவாதிப்பர் என்றார். 2003ம் ஆண்டு ஈராக் ஆக்ரமிக்கப்பட்டதைத்
தொடர்ந்து, மத்தியக்கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது
என்ற ஆயர் இம்மானுவேல், சிரியா மற்றும் வட ஆப்ரிக்காவில் இடம்பெறும் பதட்ட நிலைகள் குறித்தும்
இவ்விரு சபைகளும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன எனவும் தெரிவித்தார்.