பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் ‘Vesakh’விழாவிற்கான வாழ்த்துச்
செய்தி
ஏப்.24,2014. உடன்பிறப்புகள் என்ற உணர்வின்றி, உலகில் நீதியான, அமைதியான சமுதாயத்தை உருவாக்கமுடியாது
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த உலக அமைதிச் செய்தியின் அடிப்படையில்,
பல்சமய உரையாடல் திருப்பீட அவை சிறப்புச் செய்தியொன்றை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது. புத்த
மதத்தைச் சார்ந்தவர்கள், மேமாதம் 6, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கொண்டாடவிருக்கும்
‘Vesakh’ என்ற விழாவையொட்டி, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis
Tauran அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். 'உடன்பிறப்பு உணர்வைப்
பேணி வளர்க்க' என்ற தலைப்பில் அமைந்துள்ள இச்செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வழங்கிய உலக அமைதி நாள் செய்தியிலிருந்து மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த,
நீதியான சமுதாயத்தை உலகில் உருவாக்கும் ஆவல் வளர்ந்து வரும் இன்றையச் சூழலில், சமயங்களுக்கிடையே
வளர்க்கப்பட வேண்டிய உரையாடலின் தேவை அதிகமாகின்றது என்று இச்செய்தி வலியுறுத்துகின்றது. 'சந்திக்கும்
கலாச்சாரம்' இவ்வுலகில் வளர்வதை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணங்களை
செயலாற்றும் கடமை, கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர், இன்னும் அனைத்து மதத்தினருக்கும் உள்ளது
என்று இச்செய்தியில் காணப்படுகிறது