இந்தியாவில் அமைதித் தேர்தல் நடவடிககைகளுக்கு கத்தோலிக்கர்கள் செபம்
ஏப்.22,2014. இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பொதுத்தேர்தல் சுதந்திரமாகவும் சனநாயக
முறையிலும் இடம்பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் இந்தியாவின் பெல்லாரி ஆயர்
Henry D’Souza. இம்மாதம் 7ம் தேதி முதல் மேமாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக
இடம்பெறும் இத்தேர்தலில் நாட்டிற்கான சிறந்த தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என
செபிக்குமாறு ஏற்கனவே இந்திய ஆயர்கள் பேரவை சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு
குடிமகனுக்கும் இருக்கும் வாக்களிக்கவேண்டிய கடமையை தங்கள் சுற்றுமடலில் வலியுறுத்தியுள்ள
இந்திய ஆயர்கள், நல்லத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை, கிறிஸ்தவர்கள்
தவற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். 81 கோடியே 40 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டுள்ள
இந்தியாவில் இடம்பெறும் பொதுத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மேமாதம் 16ம் தேதி இடம்பெறும்.
குறைந்தபட்சம் 272 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்கும் தகுதிப் பெறும்.