2014-04-21 14:52:45

புனிதர் பட்ட நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்


ஏப்.21,2014. ஏப்ரல் 27, வரும் ஞாயிறன்று வத்திக்கான் பேராலய வளாகத்தில் இடம்பெறும் புனிதர் பட்ட நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் உரோம் நகர் தயாராக இருப்பதாக அந்நகர மேயர் இஞ்ஞாசியோ மரினோ அவர்கள் அறிவித்தார்.
திருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், இரண்டாம் ஜான் பால் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்படும் ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்ளவரும் திருப்பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் மரினோ அவர்கள் தெரிவித்தார்.
இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் கணிப்புப்படி, உலகெங்கிலுமிருந்து எட்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் திருப்பயணிகள் அந்நாள் வைபவத்தில் கலந்துகொள்வர்.
54 நாடுகளிலிருந்து, 61 அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழு, 19 அரசுத்தலைவர்கள், 24 பிரதமர்கள் இவ்விழாவுக்கு வந்திருந்து சிறப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 பேருந்துகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவற்றை நகருக்குள்ளேயே நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகளையும் நகர அதிகாரிகள் ஏற்கனவே செய்துள்ளதாகவும் மேயர் மரினோ அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : ANSA








All the contents on this site are copyrighted ©.