தென் சூடானில் போரிட்டுவரும் குழுக்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும்
- கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு
ஏப்.15,2014. தென் சூடானில் போரிட்டுவரும் குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, அமைதிப்
பேச்சுவார்த்தைகளுக்கு உடனடியாக முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டுக்
கிறிஸ்தவத் தலைவர்கள். அரசியல் வேறுபாடுகளுக்குத் தீர்வு காண, போரும் வன்முறையுமே
வழிகள் என்று கூறிவரும் தென் சூடான் தலைவர்களின் அணுகு முறை குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக
எடுத்துரைத்தக் கிறிஸ்தவத் தலைவர்கள், அமைதிப் பேச்சு வார்த்தைகள் காலத்தாமதமாவதும்,
போருக்கானச் சூழல் உருவாகிவருவதும் மிகுந்த கவலை தருகின்றன என்றும் கூறியுள்ளனர். Juba
வின் பேராயர் Paulino Lukudo Loro அவர்கள் உட்பட, ஒன்பது கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து
கையெழுத்திட்டுள்ள ஓர் அறிக்கையில், விவசாயிகள் வேறு இடங்களுக்குக் குடிபெயரும் கட்டாயத்திற்கு
உள்ளாக்கப்படுவதால், விவசாயம் பாதிக்கப்பட்டு, 70 இலட்சம் மக்கள் வரை பஞ்சத்தால் உயிரிழக்கும்
ஆபத்து சூழ்ந்துள்ளதாகவும் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.