இயேசுவின் தியாகத்திலிருந்து அரசியல் தலைவர்கள் கற்க வேண்டும் என்கிறார் நேபாள ஆயர்
ஏப்.15,2014. மக்கள் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு தங்களைத் தியாகம் செய்வது
என்பதை நேபாள நாட்டு அரசியல் தலைவர்கள், இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்
என அழைப்புவிடுத்தார் அந்நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஆன்டனி ஷர்மா. தேர்தல்
காலத்தில் பெரும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பின்னர் அவற்றை நிறைவேற்றத் தவறுவது, மக்களைக்
கேலிச்செய்வதற்கு ஈடாகும் என்ற ஆயர் ஷர்மா அவர்கள், மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்குவோம்
என்ற தேர்தல் கால வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். உதவித்
தேவைப்படுபவர்களுக்கு பணிசெய்வது கத்தோலிக்கர்களின் கடமையாக இருக்கவேண்டும் என்பதையும்
வலியுறுத்திய நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஷர்மா அவர்கள், இறைவனின் நற்செய்தியை
மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.