மதங்களிடையே சகிப்புத்தன்மை நிலவ செபிக்குமாறு யாங்கூன் பேராயர் அழைப்பு
ஏப்ரல் 14,2014. மியான்மாரின் யாங்கூனில் இஸ்லாமியர்களுக்கும் புத்தமதத்தினருக்கும் இடையே
பதட்டநிலைகள் இடம்பெற்றுவரும் இன்றையச் சூழலில், மதங்களிடையே நிலைக்கவேண்டிய சகிப்புத்தன்மைக்கு
அனைவரும் உழைக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் யாங்கூன் பேராயர் சார்ல்ஸ் போ. தடுப்புகளை
அகற்றவும் பிரிவினைச் சுவர்களை உடைத்தெறியவும் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும் என, கிறிஸ்து
உயிர்ப்பு நாளுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள பேராயர் போ அவர்கள், பாவங்களை அறிக்கையிடுவது
மற்றும், ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதில் எடுத்தியம்பியுள்ளார். போர்கள்
மற்றும் அகதிகள் பிரச்னைகளால் பலகாலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ள மியான்மாரில்,
அமைதி மற்றும் வளமான வருங்காலத்திற்காக உழைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்
யங்கூன் பேராயர் போ. உயிர்த்த கிறிஸ்து கொணர்ந்த முக்கிய செய்தியே ஒப்புரவு எனும்
கொடைதான் என்பதையும் தன் செய்தியில் கூறியுள்ளார் பேராயர் போ.