ஏப்.14,2014. குருத்து ஞாயிறு திருப்பலிக்குப்பின், தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில்
கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
உலக இளையோர் தினக்கொண்டாட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பொதுநிலையினருக்கான திருப்பீட
அவையினால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ள
ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என ஏறத்தாழ 250 பிரதிநிதிகளுக்கும் தன்
மூவேளை செப உரையில் வாழ்த்துத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த இளையோர்
தினம் 2016ம் ஆண்டு போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் இடம்பெறுவதற்கான தயாரிப்புகள்
இப்போதே துவங்கிவிட்டன எனவும் தெரிவித்தார். பிரேசில் நாட்டில் இடம்பெற்ற உலக இளையோர்
தினத்தைத் தொடர்ந்து, தற்போது இளையோர் தினச் சிலுவையை, அந்நாட்டு இளையோர், போலந்து இளையோரிடம்
ஒப்படைக்க உள்ளதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 27ம்
தேதி புனிதராக அறிவிக்கப்பட உள்ள திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இளையோரின் மிகப்பெரும்
பாதுகாவலராக இருப்பாராக எனவும் வேண்டினார்.