2014-04-12 16:20:32

புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


ஏப்.12,2014. ஏப்ரல் 14, இத்திங்களன்று தொடங்கும் யூதர்களின் பாஸ்கா விழாவை முன்னிட்டு உரோம் நகர் யூத சமுதாயத்துக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகர் தலைமை ரபி Riccardo Di Segni அவர்களுக்கும், உரோம் யூத சமுதாயத்துக்கும் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், வருகிற மே மாதத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
ஆண்டவரின் வல்லமையுள்ள கரத்தால், அடக்குமுறையிலிருந்து விடுதலை கிடைத்த நினைவு, அடிமைத்தனத்தின் புதிய வடிவங்களால் துன்புறும் அனைவருடன் சகோதரத்துவ ஒருமைப்பாடும், கருணையும், ஒப்புரவும் காட்டப்படுவதற்கான எண்ணங்களைத் தூண்டுவதாக எனவும் அத்தந்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.