சிரியா புலம்பெயர்ந்தோர்க்கென மேலும் அதிகமான அகதிகள் முகாம்கள் திறக்கப்பட வேண்டும்
ஏப்.11,2013. லெபனன் நாட்டில் சிரியா நாட்டின் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, லெபனன்
நாட்டின் மக்கள் தொகையில் முப்பது விழுக்காட்டுக்குச் சமமாக இருப்பதால், அனைத்துலக சமுதாயம்
சிரியாவில் மேலும் அதிகமான அகதிகள் முகாம்களைத் திறக்குமாறு கேட்டுள்ளார் லெபனன் தலத்திருஅவைப்
பணியாளர் ஒருவர். சிரியா நாட்டின் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது
குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, லெபனன் காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Paul
Karam அவர்கள், சிரியாவில் போரிடும் தரப்புகளுக்கு, அனைத்துலக மற்றும் சிரியாவைச் சுற்றியுள்ள
நாடுகள் ஆயுதங்களை விநியோகிப்பதைக் கைவிட்டு அவசரகால உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்த
வேண்டும் என்று வலியுறுத்தினார். சிரியாவில் போரினால் பாதிக்கப்படாமல் இருக்கும் பெருமளவான
பகுதிகளில் அகதிகள் முகாம்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்
என்று, மாரனைட் முதுபெரும் தந்தை பெக்காரா பூத்ரோஸ் ராய் அவர்கள் ஜெனீவாவில் உரையாற்றியதையும்
குறிப்பிட்டார் அருள்பணி Karam. லெபனன் காரித்தாஸ் அமைப்பு, இரண்டு இலட்சம் சிரியா
அகதிகளுக்கு நேரிடையாகவும், 55 ஆயிரம் பேருக்கு நலவாழ்வு உதவிகளையும் செய்து வருவதாகவும்
தெரிவித்தார் அருள்பணி Karam. அரசியல் மற்றும் புவியியல் பிரச்சனைகள் என்று வரும்போது
தாங்கள் அதில் தலையிட முடியாது எனவும், இப்பிரச்சனைக்கு உலகின் பெரும் தலைவர்களே தீர்வு
காண வேண்டுமென்றும் மேலும் தெரிவித்தார் அருள்பணி Karam.