2014-04-10 16:25:39

திருத்தந்தையர் இருவர் புனிதர்களாக உயர்த்தப்படும் பெருவிழாவை முன்னிட்டு "அஞ்சாதீர்கள்" என்ற இசை நாடகம்


ஏப்.10,2014. "அஞ்சாதீர்கள்" என்று முத்திப்பேறு பெற்றத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறியது, நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதுடன், இறைவனுக்குப் பிரமாணிக்கமுள்ள ஊழியர் வழியே அவர் ஆற்றக்கூடிய அற்புதங்களையும் நமக்கு உணர்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உயிர்ப்புப் பெருவிழாவை அடுத்தத் திங்கள் முதல், ஏப்ரல் 24 வியாழன் முடிய வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் அருகில் அமைந்துள்ள Conciliazione அரங்கத்தில் "அஞ்சாதீர்கள்" என்ற பெயர்கொண்ட இசை நாடகம் நடைபெறும் என்று திருபீடத்தின் கலாச்சார அவை இவ்வியாழனன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் இந்த முயற்சியை பாராட்டியுள்ளார்.
ஏப்ரல் 27, இறை இரக்க ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்றத் திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் பெருவிழாவை முன்னிட்டு "அஞ்சாதீர்கள்" என்ற இசை நாடகம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்திப்பேறு பெற்றத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் கூற்றுகளில் மிகவும் புகழ்பெற்ற கூற்றான "அஞ்சாதீர்கள்" என்பதை மையப்படுத்தி, Lecce என்ற உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள் பணியாளர் Joseph Mailloux அவர்களால் எழுதப்பட்டு, Danilo Brugia என்பவரால் இசைவடிவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த இசை நாடகம், உயிப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் நான்கு நாட்கள் இலவசமாகக் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.