ருவாண்டா இனப்படுகொலைகள் மீண்டும் உலகில் இடம்பெறாதிருக்கட்டும்
ஏப்.08,2014. ருவாண்டாவில் ஏறக்குறைய எட்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையின்
இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி, அந்நாடு ஒரு வாரம் துக்கம் அனுசரித்து வருகின்றது. தலைநகர்
கிகாலியில் இத்திங்களன்று இடம்பெற்ற இந்நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன், இத்தகைய இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு உலக
சமுதாயம் விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ருவாண்டா இனப்படுகொலைகள், மனித
வரலாற்றின் இருளான அத்தியாயங்களில் ஒன்றாக உள்ளன என்றும், ருவாண்டாவில் நூறு நாள்களுக்கு
இரத்தம் கொட்டின என்றும் கூறிய பான் கி மூன், குணப்படுத்தும் பயணத்தை மேற்கொண்டுவரும்
அனைத்து ருவாண்டா மக்களோடு தான் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப்
படுகொலைகளைத் தடுப்பதற்கு ஐ.நா. தவறியுள்ளது எனவும், இது இன்னும் ஐ.நா.வுக்கு வெட்கக்கேடாக
உள்ளது எனவும் பான் கி மூன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பன்னாட்டுப் பிரபலங்கள்
பலரும் கலந்துகொண்டனர்.