இலங்கைத் திருஅவையில் வருகிற வெள்ளிக்கிழமையன்று மன்னிப்பு விழா
ஏப்.08,2014. ஆன்மீகப் புதுப்பித்தலைச் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ள நமக்கு ஒப்புரவு
அருளடையாளம் இன்றியமையாத கூறு என்றும், நாம் இதய மனமாற்றம் அடைய அன்னைமரியா விடுக்கும்
அழைப்பை மறக்காதிருப்போம் என்றும் கூறினார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், கடந்த மார்ச் மாத இறுதியில் மன்னிப்பு விழாவைச் சிறப்பித்ததையடுத்து,
இலங்கையில் வருகிற வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தப நாளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார்
கொழும்புப் பேராயர் கர்தினால் இரஞ்சித். அந்நாளில் நாட்டின் எல்லாப் பங்குகளும், துறவற
நிறுவனங்களும் விசுவாசிகள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஆவன செய்யுமாறும் கூறியுள்ளார்
கர்தினால் இரஞ்சித். கொழும்பு உயர்மறைமாவட்டம் கடந்த நவம்பர் 30 முதல் மரியா ஆண்டைச்
சிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.