பாவமெனும் கல்லறையிலிருந்து நாம் வெளிவர திருத்தந்தை அழைப்பு
ஏப்ரல் 07,2014. இயேசுவின் அழைப்புக்கு செவிமடுத்து கல்லறையிலிருந்து இலாசர் வெளிவந்ததுபோல்,
நாமும் நம் பாவத்தளைகளிலிருந்து வெளிவரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு
திருப்பலி வாசகமான 'இலாசரை உயிர்ப்பித்தல்' நிகழ்வு குறித்து தன் மூவேளை செபஉரையில் எடுத்தியம்பிய
திருத்தந்தை, 'நானே உயிர்ப்பும் வாழ்வும். என்மீது விசுவாசம் கொள்பவன் என்றும் இறவான்'
என்ற இயேசுவின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி, இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடிக்கும்போது,
நம் சாவுக்குப்பின் புதிய, நிலையான வாழ்வை நாம் பெறுவோம் என்றார். 'இலாசரே! வெளியே
வா' என அன்று இயேசு கூறியது, நம் ஒவ்வொருவரையும் நோக்கி அவர் விடுக்கும் அழைப்பு, ஏனெனில்,
பாவமெனும் கல்லறையிலிருந்து நாம் வெளிவரவேண்டும் என இயேசு விரும்புகிறார் என்றார் திருத்தந்தை
பிரான்சிஸ். தற்பெருமை எனும் தளைகளிலிருந்தும் நாம் வெளிவருவோம், ஏனெனில் தற்பெருமை
நம்மை அடிமைகளாக்குகின்றது எனவும் தன் மூவேளை செபஉரையின்போது தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த
ஏறத்தாழ 60,000க்கும் மேற்பட்ட மக்களை நோக்கிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.