2014-04-07 17:16:09

திருத்தந்தை : இயேசுவின் குணமளிக்கும் அருளின் துணைகொண்டு நம் பாவங்களிலிருந்து வெளிவருவோம்


ஏப்ரல் 07,2014. உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் உரோம் மறைமாவட்டத்தின் புனித கிரகரி பங்குதளத்திற்கு இஞ்ஞாயிறன்று மாலை சென்று திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் குணமளிக்கும் அருளின் துணைகொண்டு நம் பாவங்களிலிருந்து வெளிவருவோம் என அழைப்புவிடுத்தார்.
'பாவிகளாயிருக்கும் நாம், நம் பாவத்துடனேயே வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டாம்' என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயத்திலிருக்கும் பாவம் எனும் சுமையை அகற்றி, இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குணம்பெறுவோம் என்றார்.
நமக்குள்ளேயே இருக்கும் பாவம் எனும் கல்லறையிலிருந்து நாம் வெளிவர விரும்பினாலும், பலவேளைகளில் அது இயல்வதில்லை, ஏனெனில் இயேசுவின் வல்லமையின் துணைக்கொண்டே நாம் விடுதலைபெறமுடியும் எனவும் புனித கிரகரி பங்குதள மக்களிடம் கூறினார் திருத்தந்தை.
திருப்பலிக்கு முன்னர் இப்பங்குதளத்தின் சிறார்கள், இளையோர், நோயாளிகள், முதியோர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரையும் சந்தித்து அவர்களோடு உரையாடி சிறப்பு ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.