ஏப்.05,2014. மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக்
கண்டிருப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டில் இலங்கையில்
இரண்டு இலட்சத்து மூவாயிரம் பேருக்கு மலேரியா நோய்த் தொற்றியதாக பதிவானது, ஆனால், கடந்த
2012ம் ஆண்டு நவம்பரில் அந்நிலை குறைந்து, அந்நாட்டில் எவருக்கும் மலேரியா நோய்த் தொற்றவில்லை
என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இது குறித்துப் பேசிய இலங்கை நலவாழ்வு
அமைச்சர் Maithripala Sirisena, 1937ம் ஆண்டில் ஆறு மாதங்களுக்குள் 80 ஆயிரத்துக்கு அதிகமான
மக்கள் மலேரியாவால் இறந்தனர், ஆனால், இவ்வாண்டில் 3 பேரே இறந்தனர் என அறிவித்தார். இலங்கையில்,
1937ம் ஆண்டில் 13 இலட்சத்துக்கு மேற்பட்டோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர், ஆனால், 2012ம்
ஆண்டில் 23 பேரே இந்நோயால் தாக்கப்பட்டனர் எனவும் அமைச்சர் Sirisena கூறினார். அதேவேளை
டெங்கு நோய் உலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முப்பது மடங்காக அதிகரித்திருப்பதாகவும்
அந்நிறுவனம் கூறியுள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களான சிக்கின்குனியா, மலேரியா, டெங்கு,
மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறும்
அந்நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுள்ளது.