புதிய அந்தியோக்கியா சீரோ ஆர்த்தடாக்ஸ் தலைவருக்கு திருத்தந்தை வாழ்த்து
ஏப்.04,2014. அந்தியோக்கியா மற்றும் அனைத்து கீழைப் பகுதிகளின் சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ
சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதுபெரும் தந்தை இக்னேஷியஸ் 2ம் எப்ரேம்
அவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புதிய
முதுபெரும் தந்தை அவர்கள் தம் மக்களுக்கு ஆன்மீகத் தந்தையாக இருந்து, அமைதியையும் நீதியையும்
சோர்வின்றிக் கட்டி எழுப்புவார் என்றும், பொதுநலனுக்குப் பணி செய்வார் என்றும், கடினமான
சூழல்களை எதிர்நோக்கும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதன் நலனுக்காக உழைப்பார் என்றும்
தான் நம்புவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் அனைவரையும்
ஒன்றிணைக்கும் அன்புக்கும், சகோதரத்துவத்துக்கும் சான்று பகர வேண்டியது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும்
முக்கியமானது என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத்
திருஅவையும் சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபையும் நட்பிலும், உரையாடலிலும் தொடர்ந்து வளர்ந்து
அவற்றில் ஆழப்படும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்து
சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபையினருக்குத் தனது செபங்களையும் தெரிவித்துள்ளார்.