புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வு தூய்மையின் விழா, திருப்பீடம்
ஏப்.01,2014. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரும்
ஏப்ரல் 27ம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வுக்குத் தயாரிப்பாக உரோம் நகரில்
நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்து திருப்பீடம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 22ம்
தேதி உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் இளையோர் செப வழிபாடும், ஏப்ரல் 26 மாலை
உரோம் நகரின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும் செப வழிபாடும் இரு முக்கிய தயாரிப்பு நிகழ்வுகளாக
அமையும் என இத்திங்களன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தது திருப்பீடம். இந்தப்
புனிதர்பட்ட நிகழ்வு, விசுவாசத்தின் ஓர் உண்மையான விழா என்றும், இது தூய்மையின் விழா
என்றும், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் என ஏறக்குறைய ஆயிரம் பேர் கூட்டுத்திருப்பலி
நிகழ்த்துவார்கள் என்றும், ஏறக்குறைய 700 அருள்பணியாளர்கள் திருநற்கருணை வழங்குவார்கள்
என்றும் கூறப்பட்டது. மேலும், உரோம் மறைமாவட்டம், இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கென புதிய
இணையதளம், புதிய டுவிட்டர் பக்கம், முக நூல், யுடியூப் போன்றவைற்றையும் திறந்துள்ளது.
புதிய இணையதளம் - http://www.2popesaints.org/ டுவிட்டர் - @2popesaints முக நூல்
- 2popesaints இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கென, பெர்கமோ மறைமாவட்டத்தின் 900 அருள்பணியாளர்கள்
வேலையின்றி இருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென நன்கொடைகள் திரட்டவும் தொடங்கியுள்ளனர்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் பெர்கமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.