மார்ச்,28,2014. உலகம் முழுவதும் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாக
அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. இலண்டனை தலைமையகமாகக் கொண்டு
செயல்படும் "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' அரசு-சாரா மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள
ஓர் அறிக்கையில், உலக அளவில் சீனா, ஈரான், இராக், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான்
அதிக அளவு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. இதில் கடந்த
2012ம் ஆண்டில் 682 ஆக இருந்த மரணதண்டனையின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்து 778
ஆக கடந்த 2013ம் ஆண்டில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஈரானில் கடந்த ஆண்டு மட்டும் 369
மரண தண்டனைகளும், ஈராக்கில் 169 மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே
உலக நாடுகள் அனைத்தையும்விட சீனாவில் மரண தண்டனைகள் அதிகம் நிறைவேற்றப்படுவதாகவும், அதை,
சீனா வெளியிடாமல் இரகசியமாய் வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.