திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பு ஒரு கொடை, இதனை மரியா போன்ற தாழ்மையான இதயத்தால் பெற
முடியும்
மார்ச்,25,2014. மீட்பை வாங்கவோ விற்கவோ முடியாது, ஆனால், இதனைப் பெறுவதற்கு மரியாவின்
இதயம் போன்ற தாழ்மையான இதயம் அவசியம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்து
பிறப்பின் அறிவிப்பு விழாவான இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்
நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் மீட்புக்குத் தேவையான குணநலன்கள் பற்றி விளக்கினார்
திருத்தந்தை பிரான்சிஸ். ஆதாம் ஏவாளின் இறுமாப்பு இதயம் கடவுளுக்குப் பணிந்து நடக்கவில்லை,
ஆனால் இந்தப் பணிவின்மை முடிச்சு, மரியாவின் பணிவுச் செயலால் தளர்த்தப்பட்டது என்றுரைத்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆண்டவர் தம் மக்களின் இதயங்களை மென்மைப்படுத்துவதற்காக,
அவர் தம் மக்களோடு மிகுந்த கனிவுடன் நடந்து செல்கிறார் என்றும் மறையுரையில் உரைத்தார்.
பணிவு மற்றும் சாந்தம் பற்றி இந்நாளைய திருவழிபாடு எவ்வாறு விளக்குகின்றது என்று
கூறிய திருத்தந்தை, மீட்பை வாங்கவோ விற்கவோ முடியாது, அது முழுவதும் இலவசமாக நமக்கு வழங்கப்பட்டுள்ள
ஒரு கொடை என்றும், நம்மால் நம்மை மீட்க முடியாது என்றும் கூறினார். எனினும், இந்த
மீட்பைப் பெறுவதற்கு மரியா போன்று, தாழ்மையான, சாந்தமான, பணிவான இதயத்தை நாம் கொண்டிருக்க
வேண்டும் என்பதை தனது மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, நம்மை மீட்பதற்காக நம்மில்
ஒருவர் போல் ஆன இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்காகக் காத்திருக்கிறார், நமக்கு மீட்பளித்ததாகச்
சொல்லியுள்ள அவருக்கு நன்றி சொல்வோம் எனவும் கூறினார்.