மார்ச்,25,2014. அடுத்த ஆண்டு செப்டம்பரில் பிலடெஃபியாவில் நடக்கவிருக்கும் கத்தோலிக்கத்
திருஅவையின் 8வது உலகக் குடும்ப மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டங்கள் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் வழிகாட்டுதலின்படி இடம்பெறும் என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர்
Vincenzo Paglia அறிவித்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெஃபியாவில் 2015ம் ஆண்டு
செப்டம்பர் 22 முதல் 27 வரை நடக்கவிருக்கும் 8வது உலகக் குடும்ப மாநாட்டில் கலந்துகொள்ளும்
பிரதிநிதிகள், குடும்பம் பற்றிய இறையியலை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வார்கள் என்று
கூறினார் பேராயர் Paglia. இம்மாநாடு குறித்து இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில்
இவ்வாறு கூறிய பேராயர் Paglia, இன்றைய உலகில் திருஅவை, குடும்பங்களுக்கு ஆற்றும் மேய்ப்புப்பணிகள்
பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மிலானில் 7வது உலகக்
குடும்ப மாநாடு நடைபெற்றபோது, பிலடெஃபியாவில் 8வது உலகக் குடும்ப மாநாடு நடைபெறும் என்பதை
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். இவ்வாண்டு பிப்ரவரியில் குடும்பங்களுக்கென
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட கடிதத்தில் இதனை உறுதிசெய்துள்ளார் என்றும்
பேராயர் Paglia நிருபர்களிடம் கூறினார்.