இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக பிரிட்டன் மனித உரிமை அமைப்பு
குற்றஞ்சாட்டியுள்ளது.
மார்ச்,24,2014. இலங்கையில் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை
மீறல்களும், சித்ரவதைகளும், பாலியல் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெறுவதாக பிரிட்டனில்
இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. 9 சட்டவல்லுனர்கள்
இணைந்து, பாதிக்கப்பட்ட 40 பேரிடம் பெற்ற வாக்குமூலங்களின் துணையுடன் அறிக்கை ஒன்றைத்
தயாரித்துள்ளதாக Foundation for Human Rights என்ற அமைப்பு தெரிவிக்கிறது. இலங்கையில்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிரிட்டனுக்குள் நுழைந்த தமிழ் மக்களிடம் விசாரணைகளை
மேற்கொண்டபோது இந்த உண்மைகள் தெரியவந்ததாக, இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா.வால்
நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார். வாக்குமூலங்கள்வழி
தெரியவந்த விடயங்கள் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களே என தாங்கள் உணர்வதாகவும் இவர் மேலும்
கூறினார்.