மார்ச்,22,2014. இத்தாலிய மாஃபியாக் குற்றக்கும்பலுக்கு எதிராக 1996ம் ஆண்டில் Libera
என்ற அமைப்பை உருவாக்கிய அருள்பணி Luigi Ciotti அவர்கள், இவ்வெள்ளி மாலை செப வழிபாட்டில்
பேசியபோது, மாஃபியாக் குற்றக்கும்பல், "நம்பிக்கையின் கொலையாளிகள்" என்று கண்டனம் தெரிவித்தார். இந்நிகழ்வில்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய அருள்பணி Ciotti, தாங்கள் ஒரு தந்தையைக்
கண்டெடுத்துள்ளதாக நினைத்தோம், ஒரு சகோதரரையும் கண்டுபிடித்துள்ளோம் என்று கூறி, மாஃபியாக்
குற்றக்கும்பலுக்குப் பலியாகியுள்ள பல்வேறு மக்கள் பற்றி விளக்கினார். மனித வணிகத்தில்
சிக்கியிருந்த பெண்கள், நச்சுகலந்த கழிவுகளைச் சட்டத்துக்குப் புறம்பே வெளியேற்றும் தீமைக்கு
உள்ளானவர்கள், போதைப்பொருள் தொடர்பான கடனைக் கட்ட முடியாததற்குப் பழிதீர்க்கும் விதமாக,
கொல்லப்பட்ட 11 வயது Domenico Gabriele, 3 வயது Nicola Campolongo ஆகியோர் உட்பட பலர்
குறித்த விபரங்களை எடுத்துச்சொன்னார் அருள்பணி Ciotti. 11 வயது Domenico Gabriele,
2009ம் ஆண்டில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டான். அருள்பணி Ciotti
அவர்கள், ஏறக்குறைய 45 நிமிடங்கள் பேசினார். அப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
தலையைக் கவிழ்ந்தவண்ணம், கைகளைக் கூப்பிச் செபித்துக் கொண்டிருந்தார்.