2014-03-20 15:37:45

திருத்தந்தையின் ஆசீருடன் பயணிக்கும் புனித பெனடிக்ட் அமைதி தீபம்


மார்ச்,20,2014. புனித பெனடிக்ட் பெயரால் இத்தாலியின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் அமைதி தீபத்தை புனித பேதுரு வளாகத்திற்குச் சுமந்துவந்த குழுவினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் ஆசீர்வதித்தார்.
Monte Cassino என்ற இடத்தில், 529ம் ஆண்டு Nursia நகரின் புனித பெனடிக்ட் உருவாக்கிய ஒரு தவ இல்லம், 1944ம் ஆண்டு நடைபெற்ற போரில் அழிக்கப்பட்டு, மீண்டும் எழுப்பப்பட்டது.
மீண்டும் எழுப்பப்பட்ட தவ இல்லத்தின் 70ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி புனித பெனடிக்ட் அமைதி தீபம் இத்தாலியின் பல நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மார்ச் 21, இவ்வேள்ளியன்று Monte Cassino சென்றடைகிறது.
இவ்வெள்ளியன்று நடைபெறும் 70ம் ஆண்டு நிறைவு விழாவில் திருத்தந்தையின் சார்பில், திருப்பீட குடும்பங்கள் அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Ennio Antonelli அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.