ஷிமோகா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - இயேசு சபை அருள் பணியாளர் பிரான்சிஸ் செராவோ
மார்ச்,19,2014. இயேசு சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் பிரான்சிஸ் செராவோ அவர்களை, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவின் ஷிமோகா மறைமாவட்டத்தின் ஆயராக இப்புதனன்று நியமித்துள்ளார். 1959ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மங்களூருக்கு அருகேயுள்ள மூத்பித்ரி (Moodbidri) என்ற ஊரில்
பிறந்த பிரான்சிஸ், தன் 20ம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். 1992ம் ஆண்டு அருள்
பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பிரான்சிஸ் அவர்கள், பங்குத்தளங்களிலும், சமூகப்
பணி மையத்திலும், அருள் பணியாளர்கள் பயிற்சி இல்லத்திலும் 17 ஆண்டுகள் பணிபுரிந்தபின்,
2009ம் ஆண்டு முதல் கர்நாடகா இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஷிமோகா
மறைமாவட்டத்தின் ஆயர் ஜெரால்ட் ஐசக் லோபோ அவர்கள், 2012ம் ஆண்டு ஜூலை மாதம், உடுப்பி
மறைமாவட்டத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர், ஷிமோகா மறைமாவட்டம் ஆயர் இன்றி
இருந்தது.