2014-03-19 15:47:16

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியில் முதலிடம் பெறுவது வறியோர் - கர்தினால் Marc Ouellet


மார்ச்,19,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆண்டு பணியைத் திரும்பிப் பார்க்கும்போது, வறியோர், இளையோர், குடும்பத்தினர் என்ற மூன்று வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் 13, மற்றும் மார்ச் 19, ஆகிய நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட நாள், தலைமைப் பணியேற்ற நாள் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவைக் கொண்டாட, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில், ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
தன் தலைமைப் பணியில் முதலிடம் பெறுவது வறியோர் என்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் குறித்து எழுப்பும் கருத்துக்கள் பல, உலக அமைப்பினர் பலரைச் சங்கடப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது என்று கர்தினால் Ouellet அவர்கள் கூறினார்.
இளையோருக்கும், குடும்பத்தினருக்கும் திருத்தந்தை அளித்துள்ள முக்கியத்துவத்தை அவர் அளித்துள்ள உரைகளிலும், விடுத்துள்ள திருத்தூது அறிவுரையிலும் காண முடிகிறது என்று கர்தினால் Ouellet அவர்கள் எடுத்துரைத்தார்.
"மரியா என்ற ஒரு பெண், திருஅவையின் ஆயர்கள் அனைவரையும் விட முக்கியமானவர்" என்று திருத்தந்தை கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Ouellet அவர்கள், பெண்களுக்கு அளித்துள்ள மதிப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது முதல் ஆண்டு பணியில் உணரமுடிகிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.