திருத்தந்தை பிரான்சிஸ் - தினமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு
மார்ச்,17,2014. தினமும் நற்செய்தியிலிருந்து ஒரு சிறு பகுதியை வாசித்து, அந்நாளில் நாம்
சந்திக்கும் மற்றவர்களுடன் அச்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு உருமாறிய நிகழ்வு குறித்து இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தையொட்டி
நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இவருக்குச் செவிசாயுங்கள்'
என்று தந்தையாம் இறைவன் இயேசுவைக் குறித்து கூறிய வார்த்தைகளை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும்
செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான்கு நற்செய்திகளுள் ஒன்றையேனும் கைப்பிரதியாக
வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாசித்துவருவது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று கூறியத்
திருத்தந்தை, நற்செய்தியை வாசிப்பது, மலைமேல் ஏறிச் செல்வதற்கு ஒத்ததென்றால், நாம் கீழிறங்கி
வருவது, அந்த நற்செய்தியிலிருந்து நாம் பெற்றுக்கொண்டதை மற்றவருக்கும் அறிவிக்க வேண்டிய
கடமையைச் சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார். அநீதிகளால், அறியாமையால், எழமையால்,
சோர்வு நிலைகளால் பாதிக்கபப்ட்டிருக்கும் மக்களுடன் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட
அருள்கொடைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.