கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில், இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள்
மார்ச்,17,2014. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை, இந்தியா மற்றும்
இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து இஞ்ஞாயிறன்று சிறப்பித்தனர். இராமேஸ்வரத்திலிருந்து
22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கச்சத்தீவை நோக்கி, 92 விசைப்படகுகளில் இந்தியப்
பக்தர்கள் கூட்டம் சென்றடைய, இலங்கையின் நெடுந்தீவு, மன்னார், பேசாளை, யாழ்ப்பாணம் ஆகிய
இடங்களைச் சேர்ந்த பக்தர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ள, இருநாடுகளிலும் இருந்து
சென்றிருந்த அருள் பணியாளர்கள் தலைமையில் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது. தவக்காலத்தில்
இவ்விழா இடம்பெறுவதால், சனிக்கிழமை இரவு சிலுவைப்பாதையும், அதைத் தொடர்ந்து, திருப்பலியும்
நிறைவேற்றப்பட்டன. ஞாயிறு காலை, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அருள் பணியாளர்கள்
இணைந்து நிறைவேற்றியத் திருப்பலியில், இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்.