இந்தியா : கத்தோலிக்க அருள்பணியாளருக்கு தேசிய இலக்கிய விருது
மார்ச்,15,2014. இந்தியாவில், கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு இவ்வாண்டின் தேசிய
இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்திரிகையாளரும்,
எழுத்தாளருமான 71 வயது நிரம்பிய அருள்பணி பிரான்சிஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, இந்தியாவின்
மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலியத்தின் மராத்தி மொழி பெயர்ப்பான ‘Subodh Bible – Nava Karar’ என்ற நூலுக்காக
அருள்பணி டி பிரிட்டோ அவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குழு
தேர்ந்தெடுத்த 23 நூல்களில் Subodh Bible என்ற நூல் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அருள்பணி
டி பிரிட்டோ, தனது இந்த மராத்திய விவிலிய மொழி பெயர்ப்புப் படைப்புக்கென 2014ம் ஆண்டு
ஆகஸ்டில் இடம்பெறவிருக்கும் இவ்விருது விழாவில் இவ்விருதைப் பெறவுள்ளார். இவ்விருது,
50 ஆயிரம் ரூபாயையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் உள்ளடக்கியது.