2014-03-14 16:57:49

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆண்டுத் தியானத்தை முடித்து வத்திக்கான் திரும்பியுள்ளார்


மார்ச்,14,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆண்டுத் தியானத்தை இவ்வெள்ளிக்கிழமை காலையில் முடித்து உள்ளூர் நேரம் முற்பகல் 11.29 மணிக்கு வத்திக்கான் திரும்பியுள்ளார்.
கடந்த ஞாயிறு மாலை தொடங்கிய இத்தியானத்துக்குச் சிந்தனைகளை வழங்கிய பேரருள்திரு Angelo De Donatis அவர்களுக்கு அனைவர் சார்பாக தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையின் விதையோடு நாங்கள் அனைவரும் இல்லம் திரும்புகிறோம், நம் ஆண்டவர் மழையை அனுப்பி அந்த விதையை வளரச் செய்வார், அவ்விதை வளர்ந்து கனிகளைக் கொணரும், அந்த விதைக்காகவும், ஆண்டவர் நமக்கு அனுப்பவிருக்கும் மழைக்காகவும், அந்த விதையை விதைத்த தங்களுக்காகவும் நன்றி சொல்வதாகவும் கூறினார் திருத்தந்தை.
எங்கள் அனைவருக்காகவும் செபியுங்கள், நாங்கள் பாவிகள், ஆயினும் இயேசுவை நெருங்கிப் பின்செல்வதற்கு நல்மனதைக் கொண்டிருக்கிறோம் என்றும் திருத்தந்தை, தியான மறையுரையாளரிடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அவருடன் சேர்ந்து தியானம் செய்த திருப்பீட தலைமையக அதிகாரிகள் அனைவரும் தியானம் முடிந்து அரிச்சாவிலிருந்து பேருந்தில் திரும்பினர். பேருந்திலேயே தியானம் செய்யச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர்கள் ஒன்றாய் இருக்கும்படி என்ற இறைவசனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனிதபூமித் திருப்பயணத்துக்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.