கந்தமால் பாலியல் வன்கொடுமை விவகார்த்தில் மூன்று பேர் குற்றவாளிகள், நீதிமன்றம் தீர்ப்பு
மார்ச்,14,2014. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கத்தோலிக்க அருள்சகோதரி
ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மூன்று பேர் குற்றவாளிகள் எனவும்,
ஆறு பேர் குற்றமற்றவர்கள் எனவும் இந்திய நீதிமன்றம் ஒன்று இவ்வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது. 2008ம்
ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் அருள்சகோதரி
மீனா பார்வா இந்து தீவிரவாதக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில்
10 பேர் குற்றவாளிகள் என முன்னர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மற்றொருவர் காணாமற்போய்விட்டார். அருள்பணியாளர் Thomas Chellan அவர்களுடன் திவ்யஜோதி
மேய்ப்புப்பணி மையத்தில் பணிசெய்தவர் அருள்சகோதரி மீனா. இவ்விருவரும் இந்து தீவிரவாதிகளால்
கைப்பற்றப்பட்டு பலமாக அடிக்கப்பட்டனர். இச்சகோதரியை முதலில் உயிரோடு எரிக்க நினைத்த
வன்முறைக் கும்பல் ஒன்று, அவ்வாறு செய்யாமல் கும்பலாகப் பாலியல் வன்கொடுமையைச் செய்துள்ளது.
இக்குற்றம் தொடர்பாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.