2014-03-12 16:00:13

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியின் முதல் ஆண்டு நிறைவையொட்டி, இளையோர் மேற்கொள்ளும் 24 மணி நேர செப வழிபாடு


மார்ச்,12,2014. மார்ச் 13, இவ்வியாழன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் ஆண்டு தலைமைப் பணியை நிறைவு செய்யும் தருணத்தையொட்டி, உரோம் நகரில், இளையோர் கூடி, 24 மணி நேர செப வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.
உரோம் நகரில் அமைந்துள்ள புனித இலாரன்ஸ் இளையோர் மையத்தில், மார்ச் 12, இப்புதன் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் செப வழிபாடு, மார்ச் 13, இவ்வியாழன் மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியுடன் நிறைவுபெறுகிறது.
1983ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கப்பட்ட புனித இலாரன்ஸ் இளையோர் மையம், தன் 31வது ஆண்டு நிறைவையும் இவ்வியாழன் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துவ இளையோருக்கு பயிற்சிப் பாசறை என்றும், நம்பிக்கைக்கு ஓர் ஆய்வுக்கூடம் என்றும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் அழைக்கப்பட்ட புனித இலாரன்ஸ் இளையோர் மையம், கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தெரிவு செய்ய கர்தினால்கள் சிஸ்டீன் சிற்றாலயத்தில் கூடிய நேரத்தில், தங்கள் தொடர் செபங்களை இம்மையத்தில் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.