திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து திருப்பீடத் தலைமையக அதிகாரிகள் மேற்கொள்ளும்
ஆண்டு தியானம்
மார்ச்,06,2014. வன்முறைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள், தீமைகளை நன்மைகளால் வெல்லும்
மனப்பக்குவம் பெற, அவர்களுக்காக மன்றாடுவோம் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார். மேலும், மார்ச் 9 வருகிற ஞாயிறு மாலை முதல் மார்ச்
14 வெள்ளி முடிய திருப்பீடத் தலைமையக அதிகாரிகள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன்
இணைந்து இவ்வாண்டு தியானத்தை மேற்கொள்கின்றனர். உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்
பணியாளர் ஆஞ்செலொ தெ தொனாத்திஸ் அவர்கள் வழங்கும் இந்தத் தியானம், உரோம் நகரின் Ariccia
எனும் இடத்தில் அமைந்துள்ள தெய்வீக ஆசிரியர் (House of the Divine Master) இல்லத்தில்
நடைபெறுகிறது. வத்திக்கான் அதிகாரிகள் தங்கள் பணியிடங்களைவிட்டுத் தனித்து, வேறொரு
இடத்தில் ஆண்டு தியானத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
எடுத்தார். வத்திக்கான் அதிகாரிகள் ஆண்டு தியானம் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Corriere della Sera என்ற நாளிதழுக்கு அளித்த அண்மையப்
பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.