2014-03-03 16:16:18

திருத்த்தந்தை : குருக்களும் துறவறத்தாரும் இறைவனுக்கே தங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்கச் செபிப்போம்


மார்ச்,03,2014. அதிகாரம், பணம் என்ற சிலை வழிபாட்டிலிருந்து விடுதலைப் பெற்றவர்களாக இறைவனுக்கு மட்டுமே தங்கள் இதயங்களை அர்ப்பணிக்கும் அருள் பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளுக்காக தேவ அழைத்தல்களின் ஆண்டவரை நோக்கி மன்றாடுவோம் என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்தரிடம் இயேசு, அனைத்தையும் துறந்துவிட்டு வருமாறு கேட்டபோது, அச்செல்வந்தர் கவலையுடன் சென்றதைக் குறிப்பிட்டு, அவர் நல்லவராக இருந்தாலும், இவ்வுலகச் செலவங்களுக்குள் அவர் சிறைப்பட்டிருந்தார் என்றார்.
பணம் அச்செல்வந்தரைத் தேர்ந்துகொண்டு சிறைப்படுத்தியிருந்ததால், அவரால் வெளியே வரமுடியா நிலையிலிருந்தார், அதுபோல் இன்றும் பல இளைஞர்கள் இறையழைப்பை உணர்ந்தும், உலக சுகங்களை துறந்துவிட்டு வரமுடியா நிலையிலுள்ளனர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தகைய இளையோர், தங்கள் அழைப்பைக் கண்டுகொண்டு, நல்ல அருள் பணியாளர்களாகவும், நல்ல அருள்சகோதரிகளாகவும் மாற செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.