2014-03-01 15:36:16

பொதுக்காலம் 8ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "ஒரு சில பொத்தான்களைக் காணோம்" (A Few Buttons Missing) என்பது 1951ல் James T.Fisher என்பவரால் எழுதப்பட்ட புத்தகம். மனநல மருத்துவரான Fisher அவர்கள், தன் அனுபவங்களையெல்லாம் நகைச்சுவை கலந்து எழுதியுள்ளார். புத்தகத்தின் இறுதி பக்கங்களில் தான் வாழ்வில் கற்ற சில பாடங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்பாடங்களில் ஒன்று இயேசுவின் மலைப்பொழிவைப் பற்றியது:
"உலகின் புகழ்பெற்ற மனநல மருத்துவர்கள், அறிஞர்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்களையும் ஒன்று திரட்டுவோம். அவற்றில் உள்ள தேவையற்ற வார்த்தைகளை எல்லாம் எடுத்துவிடுவோம். மனநலம் பற்றி ஆடம்பரமற்ற, கலப்படமற்ற உண்மைகளை எல்லாம் திரட்டினால், அவற்றில் இயேசு போதித்த மலைப்பொழிவின் சில பகுதிகளையாவது காணலாம். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம், ஓய்வின்றி, வீணாகச் சுமந்திருக்கும் ஏக்கங்களுக்கு, மலைப்பொழிவில் கிறிஸ்தவ உலகம் முழுமையான பதிலைக் கொண்டுள்ளது." என்று Fisher கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 33வது அரசுத் தலைவராக இருந்த Harry Truman சொன்ன கூற்றுகளில் ஒன்று இது: "மலைப்பொழிவு தரும் பாடங்களைப் பயன்படுத்தினால், தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலோ, உலகிலோ எதுவும் இருக்கமுடியாது."
கிறிஸ்தவம், சமயம் என்ற எல்லைகளைக் கடந்து, உலகத்தலைவர்களை, பெரும் அறிஞர்களைக் கவர்ந்துள்ள இயேசுவின் மலைப்போழிவைக் கடந்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகள் சிந்தித்து வருகிறோம். இன்று நான்காம் முறையாக சிந்திக்க வந்திருக்கிறோம். இயேசுவின் மலைப்பொழிவு நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள், இவ்வாரம் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்குத் தகுந்ததொரு தயாரிப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு மூன்று அறிவுரைகளைத் தருகிறார்:


"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது" இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் இயேசு கூறும் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் நாம் வாழும் இன்றைய உலகின் அரசியல் குறித்து நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. இந்தியா விரைவில் தேர்தல்களைச் சந்திக்கவிருப்பதால், இவ்வரிகளை ஓரளவு ஆழமாகச் சிந்திப்பது பயனளிக்கும்.
இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, உண்மையான தலைவன், உண்மையான பணியாளரைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது” என்ற இயேசுவின் கூற்று, நமது அரசியல் தலைவர்கள், தொண்டர்களுக்குப் பொருந்தாது. அரசியலில், தலைவர்கள், தொண்டர்கள் அனைவருமே வேறொரு தெய்வத்திற்குப் பணியாளர்கள். பணம் என்ற தெய்வத்திற்கு இவர்கள் அனைவரும் பணிவிடை செய்பவர்கள்.
இயேசு இன்றைய நற்செய்தியில் செல்வத்திற்குப் பணிவிடை செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். "கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று இயேசு கூறும் வார்த்தைகளைக் கேட்கும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளூர ஏளனமாய்ச் சிரித்துக்கொள்வார்கள். அவர்கள் சிரிப்பதற்குக் காரணம், இதுதான்... “கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது என்று யார் சொன்னது... நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே செல்வம்தான்” என்று சொல்பவர்கள் இவர்கள்.

"கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்ற இயேசுவின் இக்கூற்று, செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து பேசப்பட்டது போலத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, செலவிடுவது இவற்றை இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம் என்ற உயிரற்றப் பொருள் நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். அதுதான் இயற்கை. அதற்குப் பதிலாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அடுத்த அறிவுரை: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
இந்த அறிவுரையைப் பற்றி பேச எனக்குச் சிறிது தயக்கம், பயம். என் உடன்பிறந்தோர், உறவினர், நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது நான் இயேசுவின் இந்த அறிவுரையை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவர்களில் பலர் எனக்குத் தந்த பதில் இதுதான்: "சாமி, உங்களுக்கென்ன, புள்ளயா, குட்டியா கவலைப்படுவதற்கு? கவலைப்படவேண்டாம்னு நீங்க ஈசியா சொல்லிடுவீங்க. ஆனா, எங்க நிலைல இருந்தீங்கனாத் தெரியும்." இது அவர்களின் வாதம். குடும்ப பாரம் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நானல்ல, ஏற்றுக்கொள்கிறேன். குடும்ப பாரங்களைச் சுமப்பவர்களின் கவலைகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. உண்மைதான். ஆனால், கவலைகளின் சுமைகளால் நமது உள்ளங்கள் நசுங்கிவிடாமல் காக்கும் வழிகளையும் நாம் சிந்திப்பது நல்லதென்று நினைக்கிறேன். முயன்று பார்ப்போம்.

கடவுளையும், செல்வத்தையும் இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் ஒப்புமைப்படுத்திப் பேசிய இயேசு, கடவுளையும், கவலைகளையும் இரண்டாம் பகுதியில் ஒப்புமைப்படுத்துகிறார். செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடுவதும், பணிவிடை செய்வதும் தவறு என்று கூறும் இயேசு, கடவுளை நம் கண்களிலிருந்து மறைக்கும் அளவு நம்மை நாமே கவலைகளால் சூழ்ந்துகொள்வது பற்றியும் எச்சரிக்கிறார். சிறு, சிறுத் துளிகளாய் சேரும் கவலைகளைப்பற்றிக் கவனமின்றி இருந்தால், அவை விரைவில் கடலாக மாறி, நம்மை மூழ்கடிக்கும்.

Erma Louise Bembeck என்ற எழுத்தாளர் 1960களில் அமெரிக்க நகர வாழ்வைப்பற்றி சிறு பகுதிகளாக நாளிதழ்களில் எழுதிவந்தார். வேடிக்கையும் கருத்தும் நிறைந்த இவரது எண்ணங்கள் 15 புத்தகங்களாய் வெளிவந்துள்ளன. புதிதாகச் சேர்ந்துள்ள பள்ளிக்குச் செல்ல பயந்த Donald என்ற சிறுவனைப்பற்றி Erma எழுதிய ஒரு சிறு பகுதி இது:
"என் பெயர் Donald. எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய ஒரு பல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட்டதால், இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. என் பள்ளி உணவகத்தில் நாற்காலிகள் அதிக உயரமாய் இருந்தால், நான் எப்படி அதில் ஏறி அமரமுடியும்? நான் பள்ளியில் முகம் கழுவும்போது, என் சட்டையில் குத்தப்பட்டுள்ள அட்டையில் தண்ணீர்பட்டு, என் பெயர் அழிந்துவிட்டால், என்ன செய்வேன்? ஆடிக்கொண்டிருக்கும் என் பல், வகுப்பு நடக்கும்போது விழுந்துவிட்டால், என்ன செய்வேன்? கொட்டும் இரத்தத்தை யார் துடைப்பார்கள்?"
சிறுவன் Donaldன் இந்தக் கவலைப்பட்டியலை வாசிக்கும்போது, வயதில் வளர்ந்துவிட்ட நமக்கு மனதில் ஒரு இலேசான கேலிச்சிரிப்பு எழுகிறது... இல்லையா? மனதைத் தொட்டுச்சொல்லுவோம். எத்தனை முறை நாம், சிறுவன் Donaldஆக மாறியிருக்கிறோம், இன்றும் மாறிவருகிறோம்.

"கவலைப்படாதீர்கள்" என்று மட்டும் இயேசு கூறிச் சென்றிருந்தால், அவருக்கென்ன, பிரமச்சாரி, இறைமகன், எளிதாகச் சொல்லிவிட்டார் என்று நாம் குறை கண்டுபிடித்திருப்போம். கவலை கொள்ளாமல் இருக்க இயேசு வழிகளையும் சொல்லியிருக்கிறார். கவலைக்குப் பதில் கடவுள் நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கவலைப்படுவதால் உங்களில் யார் தன் உயரத்தைக் கூட்டமுடியும் என்று அவர் நமக்கு முன் வைக்கும் ஓர் எதார்த்தமான சவால், நம்மை விழித்தெழச் செய்கிறது. கவலைப்படுவதால் ஒருவேளை நாம் குறுகிப் போக, உடல்நலம் குறைந்துபோக அதிக வாய்ப்புக்கள் உண்டு. உலகில், இன்று, முன்னேற்றம் அடைந்துள்ளதாக முரசுகொட்டும் பல நாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது என்பது நமக்குத் தெரியும். தற்கொலைக்கு அடுத்தபடியாக, கவலைகளால் உருவாகும் வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது இன்றையப் புள்ளிவிவரங்கள். கவலைப் படுவதால், உடல் உயரத்தைக் கூட்ட முடியாது, உடல் நலத்தையும் கூட்ட முடியாது.

செல்வம் சேர்க்காதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. காசையும், கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்றவேண்டாம், அவற்றிற்குக் கோவில் கட்டவோ, அவற்றிற்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்பதே இயேசு ஆணித்தரமாகக் கூறும் ஆலோசனை.
இயேசு இன்று நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள் நம் மனதில் ஆழமாய் பதிய வேண்டும். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய, மிகவும் எளிதான அறிவுரை இது: நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

Christy Lane என்பவர் எழுதிய “ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாளாக...” (One Day At A Time) என்ற புகழ்பெற்ற ஒரு பாடல் பல்லாயிரம் மக்களின் மனங்களிலிருந்து எழும் வேண்டுதலாக ஒவ்வொரு நாளும் விண்ணை நோக்கிச் செல்கிறது. வாழ்வை ஒவ்வொரு நாளாக எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும் என்ற உணர்வுடன் இந்தச் செபத்தைக் கேட்போம்:

நான் ஒரு சாதாரண மனிதப்பிறவி.
இறைவா, நான் ஏறிச்செல்ல வேண்டிய படிக்கற்களைக் காட்டும்.
நேற்று என்பது போய்விட்டது, நாளை என்பது என்னை அடையாமலேயே போகலாம்...
எனவே, இன்று மட்டும் எனக்கு உதவி செய்யும்...
வாழ்வை ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு நாளாக எடுத்துக்கொள்ள
இறைவா, எனக்குச் சொல்லித்தாரும்.








All the contents on this site are copyrighted ©.