மார்ச் 01,2014. புனிதரும் மனிதரே. –துண்டிக்கப்பட்ட தலையுடன் பத்து கிலோமீட்டர் நடந்து
போதித்தவர்
மூன்றாம் நூற்றாண்டில் தேசியுஸ் பேரரசரின் காலத்தில், இத்தாலியில் பிறந்து குருவான டென்னிஸ்,
பிரான்ஸ் நாட்டில் போதிக்க, திருத்தந்தை ஃபாபியன் என்பரால் அனுப்பப்பட்டவர். அங்கு பாரீஸ்
நகர ஆயராக நியமிக்கப்பட்ட இவர், பலரை மனந்திருப்பினார். இவர் போதனைகளைக் கேட்டு எண்ணற்றோர்
கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதால், புறவின மதக்குருக்கள் இவரைக் கொல்ல வழி தேடினர். பாரிஸிலுள்ள
உயர்ந்த மலையின் உச்சிக்கு அவரை இழுத்துக் கொண்டுபோய், ஒரு நீண்ட வாளால் அவர் தலையைத்
துண்டித்தனர். தலை தனியே அவர் காலடியில் வீழ்ந்தது. தலை துண்டிக்கப்பட்டவுடன் அவர் உடலும்
கீழே விழுந்து துடிதுடித்து இறந்திருக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவர் குனிந்து,
தன் தலையை கைகளால் எடுத்து மார்பருகே வைத்துக்கொண்டு, கிறிஸ்துவைக் குறித்து போதிக்கத்
துவங்கினார். ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் போதித்துக்கொண்டே நடந்து, ஓரிடத்தில் விழுந்து
இறந்தார். அந்த இடத்தில் புனித டென்னிஸ் பசிலிக்கா எழுப்பப்பட்டது. அதுவே பிற்காலத்தில்,
பிரெஞ்ச் மன்னர்கள் இறந்தபின் புதைக்கப்படும் இடமாக மாறியது. ஒருவர் துண்டிக்கப்பட்ட
தன் தலையை கைகளில் ஏந்திக்கொண்டு 10 கிலோ மீட்டர் நடக்க முடியுமா என இன்று நாம் கேள்வி
எழுப்பலாம். ஆனால், இறைவன் துணையிருந்தால் எதையும் ஆற்றமுடியும் என்பதற்கு, போதிய சரித்திரச்
சான்றுகள் உள்ளன.