பிப்.28,2014. சீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து 382 குழந்தைகளை மீட்டுள்ளதோடு,
குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1094 பேரையும் காவல்துறையினர்
கைதுசெய்துள்ளனர். சிறாரைத் தவறாகப் பயன்படுத்தல், மனித உரிமை மீறல்கள், ஊழல் குறித்தக்
குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்வமற்ற தத்து கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி
குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் கடத்தலை
முறியடிப்பதில் நவீன தொழிநுட்பங்கள் பெரும் சவாலாக இருப்பதாக சீன அரசின் ஊடகம் கூறுகிறது. சீனாவில்
பாரம்பரியமாகவே ஆண்குழந்தைகளை விரும்புகின்ற போக்கும் கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுக்
கொள்கையும் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவதற்கு மேலும் சாதகமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகளைக்
கடத்துதல் அல்லது பெற்றோரிடமிருந்து வாங்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு
கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.