2014-02-27 15:33:01

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மார்ச், ஏப்ரல் மாத நிகழ்வுகள்


பிப்.27,2014. வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.
மார்ச் 5 திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித ஆன்சல்ம் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு வழிபாட்டை நிறைவேற்றிய பின், அங்கிருந்து ஊர்வலமாக புனித சபினா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்துவார்.
மார்ச் 9 ஞாயிறு முதல் வெள்ளி முடிய வத்திக்கானில் வாழும் கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் அனைவரோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இவ்வாண்டுக்கான ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்வார்.
மார்ச் 16 தவக்கால 2ம் ஞாயிறன்று உரோமையிலுள்ள மன்றாட்டுக்களின் புனித அன்னைமரியா பங்குத்தளத்தில் மாலை திருப்பலி நிகழ்த்தி பங்கு மக்களைச் சந்திப்பார். அதேபோல் ஏப்ரல் 6 தவக்கால 3ம் ஞாயிறன்று உரோமையில் மற்றொரு பங்கில் திருப்பலி நிகழ்த்தி மக்களைச் சந்திப்பார்.
ஏப்ரல் 13 குருத்தோலை ஞாயிறுடன் துவங்கும் புனித வார நிகழ்ச்சிகள் அனைத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் புனித பேதுரு பசிலிக்காவிலும், வளாகத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 உயிர்ப்பு ஞாயிறன்று ஊருக்கும் உலகுக்கும் என்று பொருள்படும் Urbi et Orbi செய்தியைத் திருத்தந்தை வழங்குவார் என்றும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 27 இறைஇரக்க ஞாயிறன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் திருவழிபாட்டையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.